• மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவம் குறித்து வேளாண் சுற்றுலா.
• மாணவர்களுக்கு வேளாண்மை உணவின் முக்கியத்துவம் குறித்து வேளாண் சுற்றுலா - பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடி மகிழ்ச்சி.
• பள்ளி குழந்தைகள் இயற்கையை நேசிக்கவும் விவசாயத்தை அறிந்து கொள்ளும் கல்வி சுற்றுலா அறிவு தோட்டத்தில் நடைபெற்றது.
மக்களுக்கு நச்சு இல்லாத உணவு கொடுப்பதும் இயற்கை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நேரடியாக சந்தித்து விற்பனை செய்து கொள்ளும் மக்கள் நலச் சந்தைகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தி வரும் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்செல்வன் சிறப்புடன் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி அருகில் காலாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அறிவுத் தோட்டத்தில் 12 ஆண்டு கால சீரிய முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக வேளாண் சுற்றுலா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ஸ்ரீ விஜய் பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் அறிவுத்தோட்டம் வேளாண் சுற்றுலா மையத்திற்கு வருகை தந்து கல்வி சுற்றுலா மிகவும் பயனுள்ள வகையில் கொண்டாடினர். சுமார் 225 மாணவர்களும், 25 ஆசிரியர்களும் அறிவுத்தோட்டம் சென்று வேளாண்மை குறித்து தெரிந்து கொண்டனர்.
மேலும் மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா, பாரம்பரிய விளையாட்டுகள் பம்பரம், கோலி, கிட்டிப்புல், பல்லாங்குழி, கொல கொலயாம் முந்திரக்கா... போன்ற விளையாட்டுகள் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.
விவசாயம் எப்படி நடக்கிறது என்பதை மாணவர்கள் நேரடியாக வியந்து பார்த்தவுடன் தங்கள் கைகளால் மிளகாய் நாற்றுக்களை நடவு செய்து புதிய அனுபவத்தை பெற்றனர்.
மூலிகை செடிகளை கண்டு நுகர்ந்து ஆச்சரியப்பட்டனர். மேலும் மூலிகைகள் குறித்து பெயர்கள், நன்மைகள், பயன்பாடுகள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.
சமூகத்தில் நாம் வாழ்வதற்கு யார் யாரெல்லாம், எப்படி எல்லாம் உழைக்கிறார்கள் என்பது குறித்து அறிய மாணவர்களுக்கு ஒரு உழைப்பாளி மற்றும் ஒரு விவசாயியை அறிமுகம் செய்து நேரடியாக அவர்களின் அனுபவங்களை பகிர்ந்தனர்.
மாணவர்கள் மரங்களை தங்கள் நண்பர்களாக கருதி உரையாடல் மேற்கொண்டனர். தங்களுக்கு அதிக பழங்கள் கொடுக்குமாறும் இயற்கையை பாதுகாக்குமாறும் "நாங்கள் உங்களை பாதுகாப்போம்" என்றும் உறுதியளித்தனர்.
இயற்கை சூழலில் அமர்ந்து அனைவரும் மதிய உணவு உண்டு மகிழ்ந்தார்கள்.
நாம் உண்ணும் உணவு நமக்கு எப்படி கிடைக்கிறது என்பது குறித்து மாணவர்களுக்கு நெல்லின் பல்வேறு வளர்ச்சி படி நிலைகள் நேரடியாக காண்பிக்கப்பட்டது.
நெல்லை முளைக்க வைத்து, நாற்று விட்டு, கதிர் அறுத்தல், நெற் மணி அரிசியாகி சோராகும் வரை அதன் பரிணாமங்கள் காட்சிபடுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு இயற்கை முறையில் விளைந்த பல தானிய சத்துமாவு, ஆரோக்கிய லட்டு மற்றும் பூஞ்செடிகள் கொடுக்கப்பட்டது.
இது குறித்து அறிவுத் தோட்டத்தின் உரிமையாளரும், இயற்கை ஆர்வலரும் மக்கள் நல சந்தை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் கூறுகையில், மாணவர்களுக்கு வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறான நிகழ்வுகள் மூலம் மாணவர்களுக்கு உணவு பழக்க வழக்கங்கள், மற்ற உயிர்கள் பற்றிய தெளிவு ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்றார்.
இதுகுறித்து ஸ்ரீ விஜய் பள்ளி நிர்வாகம் கூறுகையில், மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இம்மாதிரியான புதிய முயற்சியை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். மேலும் மாணவர்களுக்கு ஒரு செய்தியை சொல்வதை காட்டிலும் நேரடியாக காண்பிப்பதன் மூலம் அதன் பிம்பம் அவர்கள் மனதில் பதியும் என்பதாலே மாணவர்களுக்கு இந்த வேளாண்மை சுற்றுலா ஏற்பாடு செய்தோம்.
இந்த வேளாண் சுற்றுலாவின் மூலம் மாணவர்களுக்கு வேளாண்மை குறித்தும் உணவின் முக்கியத்துவம் குறித்தும் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
Comments
Post a Comment