• வேலூர் வாக்கு சாவடி மைய அடிப்படை வசதி ஆலோசனை கூட்டம் -
· வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,427 வாக்கு சாவடி மையங்களில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அடிப்படை வசதிகளை உறுதி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் - மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 1427 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அடிப்படை வசதிகளை உறுதி செய்வது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையமும் தரைதளத்தில் அமைந்திருக்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்தள வசதி, வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி, இருக்கை வசதி, மின்விளக்குகள், அறிவிப்பு பலகைகள் போன்ற அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 1427 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாத்துசாவடிகளில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பதை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் 147 வாக்குச்சாவடி மையங்களில் விடுபட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
பொதுப்பணி துறையின் சார்பில் 10 வாக்குச்சாவடி மையங்களிலும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 72 வாக்குச்சாவடி மையங்களிலும், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 51 வாக்குச்சாவடி மையங்களிலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 1 வாக்கு சாவடி மையத்திலும், தனியார் பள்ளிகளில் அமைந்துள்ள 13 வாக்குசாவடி மையங்களிலும் விடுபட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சிறிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. இப்பணிகளை வருகின்ற 20-ஆம் தேதிக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தினார்
இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாஸ்கரன், தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment