• வேலூர் மாவட்ட மக்கள் குறைத் தீர்வு நாள் கூட்டம்.

·        வேலூர்  மாவட்ட மக்கள் குறைத் தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் 438  கோரிக்கை மனுக்களை பெற்றார்.

                வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில்  நடைபெற்றது.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை. மருத்துவத் துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 438 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் அனைத்து அரசு அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.

 மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பிஜி நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி 2024 மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய பளு தூக்கும் போட்டியில் வேலூர் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்-டம் தங்கள் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

 முன்னதாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வாகனத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு விளம்பரங்களை திரையிடப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், மகளிர் திட்ட இயக்குநர் உ.நாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இராமசந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) அப்துல்முனீர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வி உமா, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் சரவணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments