• 15-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி.
- 15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகளை வழங்கினார்.
ஜனவரி 25, 15-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுகொள்ளப்பட்டது. தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மூத்த வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்.
பின்னர் வேலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே நடைபெற்ற வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய வாக்குசாவடி மைய அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று வேலூர் கோட்டை அருகே வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது.
இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பு ஒவ்வொருவரின் வாக்குரிமை. அந்த வாக்குரிமையை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் நம்முடைய மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 06.01.2025 அன்று வெளியிடப்பட்ட நம்முடைய மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 13,09,553 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள்-6,31,216 நபர்களும், பெண் வாக்காளர்கள்-6,78,153 நபர்களும், மூன்றாம் பாலினத்தவர் 184 பேரும் உள்ளனர். 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்குரிமையை நேர்மையாகவும் நியாயமாகவும் செலுத்த வேண்டும். வாக்களிப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய குடும்பத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாக்களிப்பது அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
வாக்களிப்பதன் அவசியத்தை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளும் வகையிலேயே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.
இன்றைய தினம் நம்முடைய வேலூர் மாவட்டத்தில் உள்ள 654 வாக்குச்சாவடி அமைவிடங்களில் அமைந்துள்ள 1314 வாக்குச்சாவடிகளிலும் தேசிய வாக்காளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே ஒவ்வொருவரும் நம்முடைய வாக்குரிமையை சுதந்திரமாகவும் நியாயமாகவும் செலுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வே.முத்தையன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) முருகன், தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment