• கோயில் திருவிழாக்கள் - அனைத்து துறை அலுவலர் ஆலோசனை கூட்டம்.
· குடியாத்தம் அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு திருவிழா, அருள்மிகு ஸ்ரீ பொற்கொடியம்மன் திருக்கோயில் புஷ்பரத ஏரித் திருவிழா மற்றும் அருள்மிகு ஸ்ரீ பாலசார்தூலீஸ்வரர் திருக்கோயில் கருப்புலீஸ்வரர் திருத்தேர் உற்சவம் –
· கோயில் திருவிழாக்களை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், கோபாலபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு திருவிழா, அணைக்கட்டு வட்டம், வல்லண்டராமம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொற்கொடியம்மன் திருக்கோயில் புஷ்பரத ஏரித் திருவிழா மற்றும் குடியாத்தம் நகரம், நெல்லூர்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசார்தூலீஸ்வரர் திருக்கோயில் கருப்புலீஸ்வரர் திருத்தேர் உற்சவம் ஆகிய திருவிழாக்களை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
குடியாத்தம் அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில்
சிரசு திருவிழாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது.
இந்து சமய அறநிலையத் துறை
கோயிலின் முன்பக்கம் உள்ள மூன்று வாசல்களில் முதல் வாசல் (தேங்காய் உடைக்கும் இடத்திற்கு அருகில் உள்ள) மூடி வைக்கப்பட வேண்டும். 2-வது வாசல் (பிரதான வாசல்) வழியாக பொது மக்கள் தரிசனத்திற்கு செல்ல வேண்டும். 3-வது வாசல் வழியாக ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை எடுத்து செல்பவர்கள் தரிசனத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும். ஆற்றில் தரிசனத்திற்காக செல்ல வழி அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மக்கள் வெயிலில் பாதிக்கப்படாமலிருக்க பந்தல் அமைக்கப்பட வேண்டும்.
பக்தர்கள் தரிசனம்
1.பொது தரிசனம்
கவுண்டன்ய ஆற்றில் கோயிலின் சுற்று சுவரை ஒட்டி சவுக்கு கட்டைகள் மூலம் 100 மீட்டர் தூரத்திற்கு “U“ வடிவில் மூன்று வளைவுகளில் வந்து பின்னர் மேடு ஏறி கோயிலின் மத்தியில் உள்ள வாசல் வழியாக நேராக சிரசு வைக்கப்பட்டுள்ள இடத்தினை அடைந்து பின்னர் பின்பக்க வழியாக வெளியே செல்ல வேண்டும்.
திருக்கோயிலின் மூன்றாவது வாசல் வழியாக ஊர் பொது மக்கள் சார்பாக மாலை எடுத்து செல்பவர்கள் செல்ல வேண்டும். கோயிலின் பின்புரம் பக்கவாட்டில் உள்ள வழியில் முக்கிய பிரமுகர்கள் சிரசின் இடது பக்கம் உள்ள வழியில் சென்று வர வேண்டும்.
கெங்கையம்மன் சிரசு வைத்து வழிபாடு செய்யவுள்ள இடத்தில் விழா குழுவினர் 20 நபர்கள் மாற்றி மாற்றி சுழற்சி முறையில் இருக்க வேண்டும். அதிக நபர்கள் கூட்டமாக இருக்க கூடாது. தண்ணீர் டேங்க்கிலிருந்து கோயில் வரை எவ்விதமான கடைகளும் வைக்க அனுமதிக்க கூடாது. பெரிய அளவிலான ராட்டினம் (Giant Wheel) அமைக்க அனுமதிக்க கூடாது.
நகராட்சி நிர்வாகம்
திருக்கோயிலைச் சுற்றி தூய்மை செய்து சுண்ணாம்பு தெளித்து தருதல். தேரோடும் வீதிகளில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப் படுத்துதல்
தேர் செல்லும் பாதைகள் விவரம்
1. சிப்பாய் முனிசாமி தெரு
2. குள்ளப்ப கவுண்டர் தெரு
3. குல்லாரி மந்திரி தெரு
4. காண்ட்ராக்டர் பொன்னுசாமி தெரு
5. கந்தப்பன் தெரு
6. கிங்கினி அம்மன் கோயில் தெரு
7. காந்தி ரோடு
8. நீலி கோவிந்தப்ப செட்டி தெரு
9. தரணம்பேட்டை பஜார் தெரு
10. தங்கள்ள ராமசாமி செட்டி தெரு
11. பஞ்சு குட்டி தெரு
12. தரணம்பேட்டை பிள்ளையார்கோயில் தெரு
மதிய உணவிற்காக நிலை நிறுத்துதல்
பிற்பகல் 3.00 மணிக்கு புறப்பாடு
1. பிள்ளையார் கோவில் தெரு
2. தரணம்பேட்டை பஜார் (பாபு மஹால் வழியாக)
3. பூக்கடை பஜார் தெரு
4. கண்ணகி தெரு
5. அப்பாகுட்டி பிள்ளை தெரு
6. காந்தி ரோடு
7. ஜவஹர்லால் தெரு
8. போடிப்பேட்டை ரோடு (கோபாலபுரம் தண்ணீர் டேங்க்)
திருக்கோயில் இடத்திற்கு மாலை 6.30 மணியளவில் தேர் நிலை நிறுத்துதல்.
திருக்கோயிலுக்கு அருகாமையிலும் ஆற்றிலும் தற்காலிகமாக குடிநீர் குழாய்களை அமைத்து தருதல்
நகரின் முக்கிய பகுதிகளில் தேர்திருவிழா நாளான 14.05.2025 மற்றும் சிரசு ஊர்வலம் 15.05.2025 விடியற்காலை முதல் ஆங்காங்கே தற்காலிகமாக தூய்மையான குடிநீர், தண்ணீர் டேங்குகள் அமைத்து குடிநீர் நிரப்பி தருதல்
தேர்திருவிழா அன்று 14.05.2025 இரவு பக்தர்கள் பிரார்த்தனை (அங்க பிரதட்சணம்) செலுத்த வேண்டி டிராக்டர் மூலம் குடிநீர் வசதி செய்து தருதல். சிரசு தினத்தன்று தற்காலிகமாக நகரும் கழிப்பறைகளை(Mobile Toilet) ஏற்பாடு செய்து தருதல்
திருக்கோயிலில் தூய்மை பணிகள் மேற்கொண்டு குப்பைகளை தினசரி அகற்றி மருந்து தெளித்து தர ஏற்பாடு செய்தல். தேர் செல்லும் சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களை சிமெண்ட் கொண்டு சரி செய்து தருதல் .
திருக்கோயில் சுற்றி போதிய இடைவெளி விட்டு கடைகள் அமைக்க பட வேண்டும். கௌண்டன்யா ஆற்றில் சென்ற ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மண்ணின் தன்மை வலுவிழந்து காணப்படும் என்பதால் பெரிய ராட்டனம் (Giant Wheel), பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவைக்கு எக்காரணத்தை கொண்டும் அனுமதி அளிக்க கூடாது. தேர் திருவிழா, சிரசு ஊர்வலம், புஷ்பபல்லக்கு செல்லும் சாலைகளில் உள்ள தொலைபேசி இணைப்புகள், தொலைபேசி கம்பங்கள், கேபிள் டி,வி இணைப்புகள் ஆகியவற்றை தொலை தொடர்பு துறை மூலமாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல். தேர், சிரசு, புஷ்பபல்லக்கு விழா தினங்களில் பணியாளர்கள் போதிய அளவு ஈடுபடுத்துதல்
மின்சார வாரியம்
தேரோட்ட நாளான 14.05.2025 அன்று தவிர்த்து இதர நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்குதல்
தேரோட்டத்தின்போது உயரழுத்த மின்சாரம், தாழ்வழுத்த மின்சாரம் செல்வதை தடை செய்தல், வீடுகளுக்கான மின் இணைப்புகளை தேர் செல்வதற்கு முன்பாக பிரித்து பிறகு மீண்டும் தேர் சென்ற பிறகு மீண்டும் இணைப்புகள் சரிசெய்து தர மின் பணியாளர்களை பணியமர்த்தி தருதல். தேர்திருவிழா, புஷ்பபல்லக்கு விழா 17.05.2025 அன்று இரவு 9 மணி முதல் விடியற் காலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் அன்றைய தினத்தில் உயரழுத்த மின்சாரம், தாழ்வழுத்த மின்சாரம் தடை செய்து பல்லக்கு நிலைக்கு வந்தவுடன் மீண்டும் மின்சாரம் வழங்கவும், மின் பணியாளர்கள் போதுமான அளவு உடன் இருக்க செய்தல்.
தீயணைப்புத் துறை
சிறிய தீயணைப்பு வாகனம்-1 14.05.2025 அன்று தேர் செல்லும் பாதையில் தேருடன் வர வேண்டும். கெங்கையம்மன் சிரசு விழா 15.05.2025 அன்று தீயணைப்பு வாகனம் -1 திருக்கோயில் வளாகத்தில் அவசர உதவிகளுக்காக நிறுத்தி வைத்தல். திருக்கோயிலின் முக்கிய நிகழ்வான வாண வேடிக்கை நிகழ்வு நடைபெறும் போது கூடுதல் தீயணைப்பு வாகனம் ஏற்பாடு செய்துதர வேண்டும். போதிய மீட்பு பணியாளர்கள்/உபகரணங்கள் அலுவலர்களை ஈடுபடுத்த வேண்டும்.
சுகாதாரத் துறை
போதிய மருத்துவர்கள் / செவிலியர்கள் தேவையான மருந்துகளுடன் முகாம் அமைக்க வேண்டும். தேர்திருவிழா நாளான 14.05.2025 அன்று 108 ஆம்புலன்ஸ் வாகனம் 1 திருக்கோயில் அருகாமையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும்.
சிரசு தினத்தன்று 15.05.2025 108 ஆம்புலன்ஸ் மூன்று வாகனங்கள் திருக்கோயில் அருகாமையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும். (1.வாணவேடிக்கை நடைபெறும் இடம், 2. திருக்கோயிலுக்கு அருகாமையில், 3. திருக்கோயில் பின்புறம்)
காவல் துறை
விழா நாட்களில் தினசரி போதுமான காவலர்கள் திருக்கோயில் அருகாமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுதல் வேண்டும். தேரின் பின்புற சக்கரங்களுக்கு யாரும் செல்லாமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
முக்கிய சாலைகளில்/திருக்கோயிலுக்கு அருகாமையில் ஆங்காங்கே தற்காலிகமாக CCTV கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும். தேர் மற்றும் சிரசு திருவிழாவில் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் நகைகள் களவாடுதலை தவிர்த்தல் மற்றும் பக்தர்கள் பொது மக்களுக்கு எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுத்தல். திருக்கோயில் சுற்றி போதிய இடைவெளி விட்டு கடைகள் அமைக்க வேண்டும்
கௌண்டன்யா ஆற்றில் மண்ணின் தன்மை வலுவிழந்து காணப்படும் என்பதால் பெரிய ராட்டினம் (Giant Wheel), பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவைக்கு எக்காரணத்தை கொண்டும் அனுமதி அளிக்க கூடாது. சிரசு வரும் நாட்களில் சிரசு கோவிலில் வைக்கப்படும் இடத்தில் அதிக அளவில் விழா குழுவினர் கூடுவதை தடுக்க வேண்டும்.
வருவாய்த் துறை
குடியாத்தம் கோட்டத்திற்குட்பட்ட வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர்களை மேற்படி திருவிழாவின் போது எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க கண்காணிப்பு பணியினை ஒதுக்கீடு செய்து செயல்முறை ஆணையினை குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலர் பிறப்பிக்க வேண்டும்.
போக்குவரத்து காவல்
தேர் மற்றும் சிரசு திருவிழாவில் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தடுப்புகள் (Barricade) அமைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு உரிய வசதிகள் செய்ய வேண்டும். பேருந்துகள். இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் ஆகியவற்றை வெகு தொலைவில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிரசு திருவிழா முன்பாக மக்கள் கூடுவதை தவிர்க்க ஒற்றை வழி பாதை அமைத்து போக்குவரத்தை எளிதாக்க வேண்டும்.
பொதுப்பணித் துறை
தேரினை பார்வையிட்டு தர உறுதிச் சான்று (Pre-stability) வழங்க வேண்டும்.
போக்குவரத்துத் துறை
விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தற்காலிக பேருந்து நிலையங்கள் முக்கிய இடங்களில் அமைத்து தர வேண்டும். ஆம்பூர் மார்கமாக வரும் பேருந்துகளுக்கு செருவங்கி கிராமத்திலும் பேர்ணாம்பட்டு மார்கமாக வரும் பேருந்துகளுக்கு நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியிலும் வேலூர், காட்பாடி பள்ளிகொண்டா, மார்கமாக வரும் பேருந்துகளுக்கு அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட முழுவதும் முக்கிய நகரங்களிலிருந்து குடியாத்தம் நகருக்கும் குடியாத்தம் நகரிலிருந்து பிற நகரங்களுக்கும் போதிய அளவில் கூடுதல் பேருந்துகள் இயக்கி வசதிகள் செய்து தர வேண்டும்.
உணவு பாதுகாப்புத் துறை
பக்தர்களுக்கு தனியார் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் வழங்கும் அன்னதானம் மற்றும் உணவு பொட்டலங்கள் பரிசோதித்து வழங்க வேண்டும். உணவகங்களிலும் பரிசோதணை செய்யப்பட வேண்டும்.
அருள்மிகு ஸ்ரீ பொற்கொடியம்மன் திருக்கோயில் புஷ்பரத ஏரித் திருவிழாவில் (13.05.2025 மற்றும் 14.05.2025 ஆகிய தேதிகளில்) மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.
வருவாய்த் துறை
வேலூர் கோட்டத்திற்குட்பட்ட வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர்களை மேற்படி திருவிழாவின் போது எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க கண்காணிப்பு பணியினை ஒதுக்கீடு செய்து செயல்முறை ஆணையினை வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் பிறப்பிக்க வேண்டும்.
பொதுப்பணித் துறை (கட்டுமானம் (ம) பராமரிப்பு)
திருத்தேரினை பார்வையிட்டு தர உறுதிச்சான்று (Pre-stability) வழங்க வேண்டும்.
காவல் துறை
கலந்துக் கொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு போதுமான காவலர்களை பணியில் ஈடுபடுத்தி உரிய பாதுகாப்பு அளித்து சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்க வேண்டும்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை
திருவிழா நடைபெறும் இடத்தில் தீயணைப்பு வாகனம் ஏற்பாடு செய்துதர வேண்டும். மேலும் போதிய மீட்பு பணியாளர்கள்/உபகரணங்கள் மற்றும் அலுவலர்களை ஈடுபடுத்த வேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறை
திருக்கோயிலைச் சுற்றி தூய்மை செய்து சுண்ணாம்பு தெளித்து தேரோடும் பகுதிகளில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப் படுத்த வேண்டும். விழா நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிதண்ணீர் வசதி செய்து தர வேண்டும். திருவிழா முடிந்ததும் மாநகரத்தில் உள்ள குப்பைகளை 48 மணி நேரத்திற்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதாரத் துறை
திருத்தேர் திருவிழா நடைபெறும் நாளன்று அவசர ஊர்திகளை ஆயத்தமாக வைத்தல் (108) மற்றும் முதலுதவி சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ குழுக்களை அமைக்க வேண்டும்.
மின்சாரத் துறை
திருத்தேர் செல்லும் பாதைகளில் மின்சாரம் துண்டித்தல் மற்றும் இணைத்தல் போன்ற பணிகளை விரைந்து முடிக்க குழுக்களை ஏற்படுத்த வேண்டியது.
போக்குவரத்து காவல்
திருத்தேர் திருவிழாவில் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தடுப்புகள் (Barricade) அமைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு உரிய வசதிகள் செய்ய வேண்டும். பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
போக்குவரத்துத் துறை (TNSTC)
திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தற்காலிக பேருந்து நிலையங்கள் முக்கிய இடங்களில் அமைத்து தர வேண்டும். விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கி வசதிகள் செய்து தர வேண்டும்.
உணவு பாதுகாப்புத் துறை
பக்தர்களுக்கு தனியார் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் வழங்கும் அன்னதானம் மற்றும் உணவு பொட்டலங்கள் பரிசோதித்து வழங்க வேண்டும். உணவகங்களிலும் பரிசோதணை செய்யப்பட வேண்டும்.
அருள்மிகு ஸ்ரீ பாலசார்தூலீஸ்வரர் திருக்கோயில் கருப்புலீஸ்வரர் திருத்தேர் உற்சவம் (07.05.2025) அன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது.
வருவாய்த் துறை
குடியாத்தம் கோட்டத்திற்குட்பட்ட வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர்களை மேற்படி திருவிழாவின் போது எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க கண்காணிப்பு பணியினை ஒதுக்கீடு செய்து செயல்முறை ஆணையினை குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலர் பிறப்பிக்க வேண்டும்.
பொதுப்பணித் துறை (கட்டுமானம் (ம) பராமரிப்பு)
திருத்தேரினை பார்வையிட்டு தர உறுதிச்சான்று (Pre-stability) வழங்க வேண்டும்.
காவல் துறை
கலந்துக்கொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு போதுமான காவலர்களை பணியில் ஈடுபடுத்தி உரிய பாதுகாப்பு அளித்து சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்க வேண்டும்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை
திருவிழா நடைபெறும் இடத்தில் தீயணைப்பு வாகனம் ஏற்பாடு செய்துதர வேண்டும். போதிய மீட்பு பணியாளர்கள்/உபகரணங்கள் அலுவலர்களை ஈடுபடுத்த வேண்டும்.
நகராட்சி நிர்வாகம்
திருக்கோயிலைச் சுற்றி தூய்மை செய்து சுண்ணாம்பு தெளித்து தேரோடும் வீதிகளில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப் படுத்த வேண்டும். விழா நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிதண்ணீர் வசதி செய்து தர வேண்டும். திருவிழா முடிந்ததும் மாநகரத்தில் உள்ள குப்பைகளை 48 மணி நேரத்திற்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதாரத் துறை
திருத்தேர் திருவிழா நடைபெறும் நாளன்று அவசர ஊர்திகளை ஆயத்தமாக வைத்தல் (108) மற்றும் முதலுதவி சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ குழுக்களை அமைக்க வேண்டும்.
மின்சாரத் துறை
திருத்தேர் செல்லும் நெல்லூர் பேட்டை, கிழக்கு மாட வீதி மற்றும் தெற்கு மாட வீதி மற்றும் வடக்கு மாட வீதியில் (குடியாத்தம் – பேர்ணாம்பட்டு சாலை) மின்சாரம் துண்டித்தல் மற்றும் இணைத்தல் போன்ற பணிகளை விரைந்து முடிக்க குழுக்களை ஏற்படுத்த வேண்டியது.
உணவு பாதுகாப்புத்துறை
பக்தர்களுக்கு தனியார் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் வழங்கும் அன்னதானம் மற்றும் உணவு பொட்டலங்கள் பரிசோதித்து வழங்க வேண்டும். உணவகங்களிலும் பரிசோதணை செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வி.முத்தையன், வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில்குமார் (வேலூர்), செல்வி சுபலட்சுமி (குடியாத்தம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment