• கீ.வ.குப்பம், குடியாத்தம் வட்ட வளர்ச்சி திட்ட பணிகள்

  • கீ.வ.குப்பம், குடியாத்தம் வட்ட  வளர்ச்சி திட்ட பணிகள் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு.

வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலாளர் மருத்துவர் ச.உமா, கீ.வ.குப்பம் வட்டம் மற்றும் குடியாத்தம் வட்டத்தில் அணைகள், பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் நியாய விலை கடை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலாளர் மருத்துவர் ச.உமா, கீ.வ.குப்பம் வட்டத்தில் உள்ள ராஜாதோப்பு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மழையின்போது  அணைக்கு நீர்வரத்து சுற்றியுள்ள மலைகளில் இருந்து வருவதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரானது கால்வாய்கள் வழியாக மற்றும் கரசமங்கலம் வழியாகச் சென்று இறுதியாக தாராபடவேடு ஏரியை அடைகிறது. மேற்கண்ட அணையின் உபரிநீரினால் சுற்றியுள்ள பகுதிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தொடர்ந்து கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், வடுகந்தாங்கல் ஊராட்சி தொடக்க பள்ளியில் ஆய்வு செய்து, மதிய உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குழந்தைகளுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டு இருந்ததை பார்வையிட்டு, உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். குடிநீர் மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு நவீன வகுப்பறை மூலம் கல்வி கற்பிக்கப்படுவதாக அங்கன்வாடி பணியாளர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து வடுகந்தாங்கல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்டையை பார்வையிட்டு ஆய்வு செய்து, தாயுமானவர் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார். மேற்கண்ட கடையில் மொத்தம் 70 பயனாளிகள் மேற்கண்ட தாயுமானவர் திட்டத்தில் பயன் பெற்று வருவதாக பணியாளர் தெரிவித்தார்.  70 பயனாளிகளில் 60 பயனாளிகளுக்கு கடந்த மாதம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், 10 பயனாளிகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படாமல் உள்ளதாகவும் பணியாளர் தெரிவித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பொருட்கள் பெறாத 10 பயனாளிகளை வட்டாட்சியர் மூலம் நேரில் சென்று கண்டறிந்து அவர்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க  தெரிவித்தார்.

பின்னர் குடியாத்தம் வட்டத்திலுள்ள மோர்தானா அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அணையின் மொத்த நீளம் 475 மீட்டர், உயரம் 11.50 மீட்டர்,  கொள்ளளவு 261.360 மி.க.அடி என தெரிவித்தனர். கடந்த ஒரு மாத காலமாக உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். மேற்கண்ட அணையில் இருந்து  வெளியேறும் உபரி நீரானது விவசாய நிலம் மற்றும்  பாசனத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அணையில் இருந்து வெளியேறும்  உபரிநீர் செல்லும் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பது குறித்தும் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரின் மூலம் சுமார் 8367 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெரும் வகையில் மோர்தானா அணையின் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 

தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், நெல்லூர்பேட்டை ஊராட்சி, லிங்குன்றம் ஏரியில் உபரிநீர் வெளியேறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த  ஏரியானது முழு கொள்ளளவு எட்டியுள்ளதை தொடர்ந்து ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் ஆய்வு செய்யப்பட்டது. உபரி நீர் செல்லும் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளதா என்பது குறித்து வட்டாட்சியரிடம் கேட்டறிந்தார். மழை வெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்களை தங்க வைக்க தற்காலிக முகாமாக கண்டறியப்பட்டுள்ள  நெல்லூர் பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். இப்பள்ளியில் 15 அறைகள், கழிவறை,  குடிநீர் வசதி போதுமான அளவில் உள்ளது.

அதனை தொடர்ந்து குடியாத்தம்-பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையின் குறுக்கே உபரிநீர் வெளியேற அமைக்கப்பட்ட கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்து, கால்வாயில் அடைப்பு ஏற்படாமல் நீர் வெளியேறுவதை உறுதி செய்ய சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

குடியாத்தம் கூட்டுறவு சங்கம் நியாய விலை கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தாயுமானவர் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் இருப்பிடங்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  நேரில் சென்று  ஆய்வு செய்து, தாயுமானவர் திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலுவிஜயன்,  கீ.வ.குப்பம் ஒன்றிய குழு தலைவர் லோ.ரவிசந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பத்துரை,   நீர்வளத் துறை செயற்பொறியாளர் வெங்கடேஷ், உதவி செயற்பொறியாளர் கோபி, வட்டாட்சியர்கள் பலராமன் (கீ.வ.குப்பம்), பழனி  (குடியாத்தம்) உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.