• தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு விரிவாக்க திட்டம்.
· தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு விரிவாக்க திட்டம்.
தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி நிதித்துறை அமைச்சர் 14.08.2025 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூரில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, காலை உணவு வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் 2095 தூய்மை பணியாளர்களுக்கும், குடியாத்தம் நகராட்சியில் 276 தூய்மை பணியாளர்களுக்கும், பேர்ணாம்பட்டு நகராட்சியில் 164 தூய்மை பணியாளர்களுக்கும், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 64 தூய்மை பணியாளர்களுக்கும், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 90 தூய்மை பணியாளர்களுக்கும், பென்னாத்தூர் பேரூராட்சியில் 56 தூய்மை பணியாளர்களுக்கும், திருவலம் பேரூராட்சியில் 64 தூய்மை பணியாளர்களுக்கும் காலை உணவு திட்டத்தின்கீழ் நாள்தோறும் காலை உணவு வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, பள்ளிகொண்டா பேரூராட்சி மன்ற தலைவர் சுபபிரியா, பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) க.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment