• வேலூர் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு குறை தீர்வு முகாம்
· வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து பல்வேறு காரணங்களால் உயர்கல்வி பயில இயலாத மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு குறை தீர்வு முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து பல்வேறு காரணங்களால் உயர்கல்வி பயில இயலாத மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு குறை தீர்வு முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
மாணாக்கர்களுக்கான சிறப்பு குறை தீர்வு முகாமில் 67 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கான கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் வழங்கினார்கள்.
இம்மாணவ, மாணவிகளிடம் தற்பொழுது அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு மருத்துவ கல்லூரி செவிலியர் பிரிவு, பாலிடெக்னிக், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, அவர்களுடைய விருப்பமான பாடத்திட்டங்கள் குறித்து குறிப்பு எடுத்து கொள்ளப்பட்டது. மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து வருகின்ற திங்கட்கிழமை அன்று கல்லூரியில் சேர்க்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடமும் தனித்தனியே மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் மாணாக்கர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், உயர்க்கல்வி பயில அவர்களுக்குள்ள வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.
பள்ளி படிப்பை முடித்த பிறகு உயர்கல்வி பயில நிறைய வாய்ப்புகள் உள்ளது. அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பல காரணங்களால் உயர்கல்வியை தொடர முடியாத 12-ம் வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கவும், அவர்களுக்கான உயர்க்கல்வி வாய்ப்பினை பெற்று தரவும் இந்த சிறப்பு குறை தீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
நீங்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் இல்லை என்பதற்காக கல்லூரியில் சேராமல் தவிர்ப்பதை விடுத்து எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளை பெறக்கூடிய பிற படிப்புகளை தேர்ந்தெடுத்து உயர்க்கல்வி பயில வேண்டும். எனவே, இன்று வருகை புரிந்துள்ள மாணவ, மாணவிகள் உங்களுடைய விருப்பப் பாடத்தை தேர்வு செய்து விண்ணப்பங்களை தவறாமல் அளிக்க வேண்டும். மேலும், உங்களுக்கான கல்வி கடனுதவிகளை விரைவாக வழங்க கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்தார்.
இம்முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, முன்னோடி வங்கி மேலாளர் ஜி.லில்லிபாய், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பி.செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment