• உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்.
· உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சி தலைவர் இரத்ததான முகாமை தொடங்கி வைத்து, இரத்த கொடையாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஜூன் 14 உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்த தான முகாமை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இரத்த தான முகாமில், கொடையாளர்கள் இரத்த தானம் செய்வதை பார்வையிட்டார். பின்னர் இரத்த தான முகாமில் இரத்த கொடை அளித்த 49 நபர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.
இரத்ததான முகாமை தொடங்கி வைப்பதில் பெருமையாக உள்ளது. மேலும் இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் பிறரின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக இரத்த தானம் செய்யும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
நீங்கள் அனைவரும் தொடர்ந்து பல ஆண்டுகளாக இரத்த தானம் செய்து வருகிறீர்கள் என்பது உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது. எந்த ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்வதாக இருந்தாலும் இரத்தம் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் ஏதோ ஒரிடத்தில் பாதிக்கப்படுகின்ற ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் இரத்த தானம் கொடுத்து மிகப்பெரிய உதவியை செய்து வருகிறீர்கள். மேலும் நீங்கள் அனைவரும் உங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி அவர்களையும் இரத்ததானம் வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது குறித்த முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறி, அவர்களையும் இரத்த தானம் வழங்க ஊக்கப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ். லீலாஅலக்ஸ் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சி தலைவர் மருத்துவமனையில் உள்ள வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வரும் பொது மக்களுக்கு டோக்கன் வழங்கும் பகுதி, சர்க்கரை நோய் பாத சிகிச்சை பிரிவு, முழு உடல் பரிசோதனை பிரிவு, சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகளான சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு, இரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவு, ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பிரிவுகளில் சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நாய் கடிக்கு ஊசி போடும் மையம், புறநோயாளிகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளும் ஆய்வகம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு மையம் ஆகிய பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.ரோகிணி தேவி, மருத்துவ கண்காணிப்பாளர் மரு. ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் மரு. ரவிச்சந்திரன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) (பொ) மரு. ஆக்னஸ் பியூலா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மருத்துவ கல்லூரி மருந்தியல் துறை தலைவர் மரு.சக்தி, நுண் உயிரியல் பிரிவு தலைவர் மரு. பாஸ்கர், மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் மரு. தீபக் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Comments
Post a Comment