• வேலூர் கோடைக்கால வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள்.

·        வேலூர் மாவட்டத்தில் கோடைக்கால வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள  பொதுமக்கள்  தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சை சாறு மற்றும் ORS உப்பு கரைசல் போன்ற திரவ உணவுகளை எடுத்து கொள்ள வேண்டுமெனவும், அத்தியாவசியமில்லாமல்  வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சி தலைவர்
தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பத்தால் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறி, நீர் மற்றும் உப்புச் சத்து குறைபாடு ஏற்படும்.. இதனால் தாகம், தலைவலி, சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, சிறுநீர் குறைவு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

பச்சிளம் குழந்தைகள், சிறுவர், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இந்த வெப்ப தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் சிறப்பு கவனம் எடுத்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

வெயிலிலிருந்து பாதுகாப்பதற்காக மக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சைச்சாறு மற்றும் ORS உப்புகரைசல் போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான பானங்கள் மற்றும் செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

மேலும், தளர்வான மற்றும் காற்றோட்டமுள்ள ஆடைகளை அணிய வேண்டும், குளிர்ந்த நீரில் தினமும் ஒருமுறை அல்லது இருமுறை குளிக்கலாம். தேவையில்லாமல் பகலில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக குழந்தைகள் மதிய வேளையில் வெளியே விளையாடக்கூடாது.

பகல் நேரங்களில்  வெளிப்பணியில் ஈடுபடும் பணியாளர்களும் துப்புரவு மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாக்க காலை நேரத்திலேயே பணிகளை முடிக்க வேண்டும்.

பொதுமக்கள் தாகம் ஏற்படும் வரை காத்திருக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வியர்வை ஏற்பட்டால் எலக்ட்ரோலைட் பானங்கள் மற்றும் ORS  உப்புகரைசல் எடுத்துக்கொள்ளலாம். மேலும், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள்  காலை 10.00 மணிமுதல்  மதியம் 3 மணிவரை வெளியே செல்வதை தவிர்த்து வெப்ப தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகள், நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகள், பள்ளி, சந்தை, மருத்துவமனை பகுதிகளில் குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல்கள்  அதிகளவு வைக்க  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு  மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி  உத்தரவிட்டுள்ளார்.

 

 

Comments