• வேலூர் மாநகராட்சி பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
· வேலூர் மாநகராட்சி மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ஆய்வு.
வேலூர் மாநகராட்சி மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கால்நடை மருத்துவமனை, பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம், நியாய விலை கடை ஆகிய இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வேலூர் மாநகராட்சி, தாராபடவேடு ஹவுசிங் போர்டு பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் (நகர்ப்புறம்) 2.0-ன்கீழ் பழைய கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பயோ மைனிங் திட்டம் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தாராப்படவேடு ஹவுசிங் போர்டு உரக்கிடங்கில் 4.31 ஏக்கர் பரப்பளவில் 30,812 கன மீட்டர் கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பயோ மைனிங் பணிக்கு தேவையான இயந்திரங்கள் தளத்தில் நிறுவப்பட்டுள்ளன. 3 Rotary Trommel Machines அமைக்கப்பட்டுள்ளன. மணிக்கு 40 கன மீட்டர் கழிவுகளை செயலாக்கும் திறன் கொண்டதாக இயந்திரங்கள் உள்ளன. மேலும் Transformer நிறுவும் பணி நிறைவடைந்துள்ளது. 30,812 கன மீட்டர் கழிவுகளில் இதுவரை 15,449 கன மீட்டர் கழிவுகள் பயோ மைனிங் செயல்முறை மூலம் பதப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, ஓட்டேரியில் உள்ள 20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முறையாக குளேரினேசன் செய்யப்படுகிறதா என கேட்டறிந்தார். நீர்த்தேக்க தொட்டியை சுற்றிலும் தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார். மேலும், ஓட்டேரி பகுதியில் பொதுமக்களிடம் குடிநீர், தெரு விளக்குகள், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, தொரப்பாடியில் உள்ள வேலூர் கால்நடை பன்முக மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். கால்நடைகளுக்கான மருந்துகள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், வல்லண்டராமம் ஊராட்சி, மூலைகேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். குழந்தைகளின் எண்ணிக்கையும், வருகை பதிவேட்டில் பதிவு செய்துள்ள எண்ணிக்கையும் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார். மேலும், வல்லண்டராமம் கிராமத்தில் முதியோர்களிடம் அடிப்படை வசதிகள், முதியோர் உதவி தொகை மற்றும் மகளிர் உரிமைத் தொகை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அணைக்கட்டு கூட்டுறவு நியாய விலை கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் குடும்ப அட்டைகள் தொடர்பான விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அத்தியாவசிய பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பத்துரை, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு துறை) மரு.அந்துவன் (கூ.பொ), வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சுல்தானா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் திரு.கண்ணன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார், வேலூர் வட்டாட்சியர் பழனி, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார், பள்ளி தலைமையாசிரியர் ஜோசப்அன்னையா உட்பட பலர் உடனிருந்தனர்.


Comments
Post a Comment