• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
- வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 692 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளார்ச்சி துறை, நகராட்சி நிருவாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்று திறனாளிகள் நல துறை. மருத்துவ துறை, கிராம பொது பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 692 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் மாற்று திறனாளிகள் நல துறையின் சார்பில் இயக்க திறன் குறைபாடுடைய 1 மாற்று திறனாளிக்கு ரூ.15,750/- மதிப்பில் சக்கர நாற்காலி, 2 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.950/- வீதம் ரூ.1,900/- மதிப்பிலான ஊன்றுகோல்கள், 5 மாற்று திறனாளிகளுக்கு ரூ.1,79,700/- மதிப்பில் செயற்கை கால்கள் என மொத்தம் 8 மாற்று திறனாளிகளுக்கு ரூ.1,97,350/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், உதவி ஆணையர் (கலால்) குணசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாற்று திறனாளிகள் நல துறை அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment