• அணைக்கட்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
· அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாற்று திறனாளிகள் கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணி மற்றும் சமூகநீதி விடுதியை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாற்று திறனாளிகள் கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணி மற்றும் சமூகநீதி விடுதியை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அணைக்கட்டு ஒன்றியம், கந்தநேரி, செதுவாலை, பொய்கை ஆகிய ஊராட்சி பகுதிகளில் மாற்று திறனாளிகள் நல துறையின் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு - உரிமைகள் திட்டத்தின் கீழ் இல்லம்தோறும் சென்று மாற்று திறனாளிகள் கணக்கெடுப்பு களப்பணியினை மாவட்ட ஆட்சி தலைவர் மேற்கொண்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாற்று திறனாளியின் கல்வி, வேலைவாய்ப்பு, சிகிச்சை முறைகள் மற்றும் உதவி தொகை குறித்து கேட்டறிந்தார். மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை மற்றும் தர சேவைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஒரு மாற்று திறனாளிக்கு மாற்று திறனாளி அடையாள அட்டை வழங்கி அவருடைய இல்லத்திற்கு சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
மேலும் கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வாழும் அனைத்து வகையான மாற்று திறனாளிகளுக்கும் தரமான மறுவாழ்வு சேவைகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதே தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் நோக்கமாகும்.
எனவே உங்கள் அருகிலுள்ள மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் அல்லது விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை அணுகுங்கள். அல்லது 1800 4250 111 இலவச உதவி எண் மற்றும் 9498345350 என்ற வாட்ச்ஆப் எண்ணிற்கு சைகை மொழியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அணைக்கட்டு ஒன்றியம், கந்தநேரி ஊராட்சியில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணியினை ஆய்வு செய்து மக்களின் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் பொய்கை ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவேடுகள் மற்றும் தினசரி பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அணைக்கட்டு ஒன்றியம், மூலைகேட்டில் உள்ள சமூகநீதி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மாணவர்கள் சமூகநீதி விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, விளையாட்டு உபகரணங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் கல்வித் திறன்களைக் கேட்டறிந்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களை தினமும் செய்தித்தாள்கள் வாசிக்கும்படியும், நன்றாக படிக்கும்படியும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது இளநிலை மறுவாழ்வு அலுவலர் இனியன் அண்ணாதுரை, அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமாறன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.


Comments
Post a Comment