• திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள்.
- திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாளை முன்னிட்டு கிருபானந்த வாரியார் திருவுருவ சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை.
திருமுருக கிருபானந்த வாரியார் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் காட்பாடி வட்டம், காங்கேயநல்லூர் ஞானத்திருவளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, அலங்கரிக்கப்பட்ட அன்னாரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.பேச்சிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாமன்ற உறுப்பினர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு
1. கிருபானந்த வாரியார் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி 1906-ம் வருடம் பிறந்தார்.
2. இவர் தந்தை மலையதாச பாகவதருக்கும் மாதுஸ்ரீ கனகவல்லியம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகனாக பிறந்துள்ளார்.
3. கிருபானந்த வாரியார் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகாமையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் பிறந்துள்ளார்.
4. இவரது தந்தையார் இசையிலும், இயலிலும் மாபெரும் புராண வல்லுநர் / இவருடைய அரவணைப்பில் கல்வி, இசை, இலக்கியங்களை கற்றுக் கொண்டு 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றார்.
5. இவரது 12 வயதிலேயே பதினாராயிரம் பண்களை கற்று 18-வது வயதில் சிறப்பாக சொற்பொழிவாற்றும் ஆற்றல் உடையவராக திகழ்ந்தார்.
6. இவர் அமிர்தலட்சுமியை தனது 19 வயதில் திருமணம் புரிந்துள்ளார்.
7. தனது 23 வயதில் சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் நான்கு ஆண்டுகள் வீணை பயிற்சி மேற்கொண்டார்.
8. இவர் முருக பக்தர். இவர் நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதை வழக்கமாக மேற்கொண்டு வந்துள்ளார்.
9. இவர் சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துதிறன் மற்றும் இசை போன்ற பலதுறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
10. இவர் தனியாக புராண பிரசங்கள் செய்யத் தொடங்கினார். இவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால் பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார்.
11. இவர் ‘அருள்மொழி அரசு’ என்றும், திருப்புகழ் ஜோதி என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டார்.
12. இவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியிலும் மற்றும் குட்டிக் கதைகள் வரும் நகைச்சுவையுடன் நடைமுறைச் செய்திகளையும் நயம்பட சொல்வதும் இவருக்குரிய சிறப்பம்சமாகும்.
13. இவர் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவினில் வடலூரில் சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து திருப்புகழ் அமிர்தம் என்ற மாதப் பத்திரிக்கையை வெளியிடக் கருதி “கைத்தல நிறைகனி” என்று தொடங்கும் திருப்புகழுக்கு உரை எழுதியது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாக தொடங்கியது.
14. சுவாமிகள் அந்த பத்திரிக்கையை 37 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தினார். இந்த பத்திரிக்கையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும் மற்றும் பல கட்டுரைகளையும் எழுதப்பட்டன.
15. வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்க தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மீக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ 150 ஆகும்.
16. இவற்றில் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
17. இவர் குழந்தைகளுக்காக தாத்தா சொன்ன குட்டிக் கதைகள் என்ற நூலையும், பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.
18. திருவிழாக்காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் மற்றும் பொது இடங்களில் சொற்பொழிவாற்றி பக்தர்களின் மனதினை கவர்ந்தவர்.
19. இவர் 1993 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளிநாடான லண்டன் பயணம் மேற்கொண்டு சொற்பொழிவாற்றிவிட்டு 1993-ம் வருடம் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி தாய்நாடான இந்தியாவிற்கு திரும்பும் வழியில் ஆகாய விமானத்தில் இயற்கை எய்தினார்.
20. இவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதி காங்கேநல்லூரில் இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திலேயே முழு உருவ சிலை நிறுவப்பட்டு இவருக்கென தனிக்கோயிலாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

Comments
Post a Comment