• குடியாத்தம், அணைக்கட்டு வளர்ச்சி பணிகள் ஆட்சியர் ஆய்வு.
· குடியாத்தம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் அரசு தோட்டக்கலை பண்ணை, மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள், அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நாற்றங்கால் பண்ணை ஆகிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், அகரம்சேரி அரசு தோட்டக்கலைப் பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த தோட்டக்கலை பண்ணை உள்ளூர் விவசாயிகளின் சமூக மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் தரமான நடவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் முக்கிய நோக்கில் 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மொத்தம் 34.53 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பண்ணையில் குழித்தட்டு முறையிலான வீரிய ரக காய்கறி நாற்றுகள், பழ மரக்கன்றுகள், பல்வேறு அலங்கார செடிகள் மற்றும் மரக்கன்றுகள் உள்ளிட்ட தரமான நடவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இப்பண்ணையில் பாலாஜி ரக எலுமிச்சை (Acid Lime) செடிகள் 2 ஏக்கர் பரப்பில் தாய் செடிகள் பராமரிக்கப்பட்டு, விண்பதியம் (Air Layering) முறையில் பெருக்கம் செய்யப்பட்டு, தரமான நடவுச் செடிகளாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், சின்னசேரி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சின்னசேரி ஊராட்சியில் செயல்பட்டு வரும் 29 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நாட்டுச் சர்க்கரை, நாட்டு வெல்லம், மந்தாரை இலை உள்ளிட்ட பல்வேறு உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இக்குழுக்களின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் தொழில் முன்னேற்றம் குறித்தும், தினசரி உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்கள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் விவசாய உற்பத்தியை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 11 மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், தொழிலை மேம்படுத்துவதற்கும் வட்டார வணிக வளமையத்தின் மூலம் ரூ.5,00,000/- மதிப்பில் கடனுதவிகளும், 4 திருநங்கைகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் மொத்தம் ரூ.2,00,000/- மதிப்பில் தொழில் மேம்பாட்டிற்கான நிதியுதவியையும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், சின்னசேரி அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குழந்தைகளின் வருகை பதிவேடு, மருத்துவ முகாம், மாணவ, மாணவகளின் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சின்னசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், சின்னசேரி ஊராட்சியில் 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சரியான அளவில் குளோரின் கலந்த குடிநீர் வழங்கபடுகிறதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களிடம் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் முதியோர் உதவி தொகை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், கந்தநேரி ஊராட்சியில் 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சரியான அளவில் குளோரின் கலந்த குடிநீர் வழங்கபடுகிறதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து கந்தநேரி ஊராட்சியில் ரூ.1,60,000/- மதிப்பில் கிடைமட்ட உறிஞ்சி குழி அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், இறைவன்காடு ஊராட்சியில் உள்ள நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணியாளர்களின் வேலை நேரம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) ஜெயசுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி திட்ட அலுவலர் ஜான்சன், குடியாத்தம் வட்டாட்சியர் பிரியா, அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமாரன், சின்னசேரி ஊராட்சி மன்ற தலைவர் சு.தமிழ்மணி, குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, திரு.கனகராஜ், அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், வினோத்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Post a Comment