• காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா.
· காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா - நீதிபதி யுவராஜ் பரிசு வழங்கி பாராட்டு.
வேலூர் மாவட்டம், காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
இதில் சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கி பேசுகையில்,
மாணவர்களின் தன்னம்பிக்கை, நேரம் தவறாமை, ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான பயிற்சி ஆகியவை விளையாட்டிலும் வாழ்க்கையிலும் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றார்.
பள்ளி தாளாளர் தங்கபிரகாஷ், துணைதலைவர் டாக்டர் ஜார்ஜ்அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி இனியா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக அரக்கோணம் சிறப்பு சார்பு நீதிபதி யுவராஜ் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற எமரால்டு அணி, சீருடை அணிவகுப்பில் முதலிடம் பெற்ற சபையர் அணி, கூடார அலங்காரத்தில் முதலிடம் பெற்ற மார்பிள் அணி ஆகியவற்றிற்கு வெற்றிக் கேடயங்களும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி பேசுகையில்,
நீதிமன்ற அறையும், விளையாட்டு மைதானமும் ஒழுக்கம் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் ஒரே தன்மையை கொண்டுள்ளன.
நீதிமன்றத்தில் அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவது போல, விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விதிமுறைகளையும், பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் வழிகாட்டுதலையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.
மாணவர்களின் கல்வி சாதனைகள் மட்டுமின்றி, மண்டல, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அவர்கள் பெறும் சாதனைகளும் சன்பீம் பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கும்.
விளையாட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தை குறைத்து, கவனக்குவிப்பை அதிகரித்து, மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது என்றார்.
மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் பள்ளியின் துணைதாளாளர் ரத்தீஷ், முதல்வர் ஜெயராஜ், துணைமுதல்வர்கள் வாசுதேவன், அருள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆயிஷா, ரம்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாணவன் முகமது ஷெரிப் நன்றி கூறினார்.

Comments
Post a Comment