• வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
- வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக்கடை, நிக்கல்சன் கால்வாய், அம்மா உணவகம் ஆகிய இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், வேலூர் மாநகராட்சி, கொணவட்டம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். பொதுமக்களிடம் மருத்துவரின் அணுகுமுறை, சிகிச்சை முறை, அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவரிடம் பொதுமக்களின் வருகை விவரம், மருந்துகளின் இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சுகாதார நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, கொணவட்டம் நியாய விலை கடையை பார்வையிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, நிக்கல்சன் கால்வாயை தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மழை காலத்திற்கு முன்பாக இக்கால்வாயை தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், பின்னர் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் மழைநீர் வடிகால் பணியினை துரிதப்படுத்தவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் வேலூர் மாநகராட்சி, காட்பாடி பாரதிநகரில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது உணவினை சுவைத்து பார்த்து ஆய்வு செய்து, பொதுமக்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், உணவத்தை சுத்தமாக வைத்து கொள்ளவும், சுகாதாரமான முறையில் சமைக்கவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, மண்டலம் 2, வள்ளலார் பகுதியில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிறுவர் பயிற்சி நீச்சல் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நீச்சல் குளத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, அண்ணாசாலையில் உள்ள திறந்தவெளி மேடை கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, கடைகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், வியாபாரிகளின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார், மாநகராட்சி ஆணையாளர் அ.சுல்தானா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார், வேலூர் வட்டாட்சியர் பழனி, காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Post a Comment